SHARE
வடக்கு கிழக்கு மக்களின் பொறுமையிழப்பினை நிரந்தரமாக சமரசப்படுத்த வேண்டுமாயின் மக்களின் விருப்பத்தையும் இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் வேலைத்திட்டமொன்றினை ஆரம்பித்தல் வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பௌதீக ரீதியில் தாம் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போதிலும் அவர்களின் கொள்கையினை முழுமையாக தோல்வியுறச் செய்வதற்கு இன்னும் முடியாது போயிருக்கின்றது என்றும் தெரிவித்திருக்கிறார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய அமர்வின் அங்குரார்ப்பணம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (08) இடம்பெற்றது.

அங்கு கொள்கை விளக்க உரையாற்றிபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், நிலையான நாட்டின் அடித்தளம் தேசிய நல்லிணக்கமே ஆகும். உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்மானங்களை இயற்றத்தக்க கட்டமைப்பினை அறிமுகப்படுத்த வேண்டும். அந்த நோக்கை வெற்றி கொள்வதற்கு தற்போது செயலில் இருந்துவரும் மாகாண சபை முறைமையை மேலும் பலப்படுத்துவது காலத்தின் தேவையாகும் என நான் நம்புகிறேன்.

எவ்வாறான விமர்சனங்கள் எழுந்த போதிலும் வடக்கு கிழக்கு மக்களின் பொறுமையிழப்பினை நிரந்தரமாக சமரசப்படுத்த வேண்டுமாயின் மக்களின் விருப்பத்தையும் இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் வேலைத்திட்டமொன்றினை ஆரம்பித்தல் வேண்டும்.
பௌதீக ரீதியில் நாம் பயங்கரவாதிகளை தோற்கடித்த போதிலும் அவர்களின் கொள்கையினை முழுமையாக தோல்வியுறச் செய்வதற்கு இன்னும் முடியாது போயிருக்கின்றது. கடந்த மூன்றரை வருடங்களாக சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பை பெற்று அந்தக் கொள்கையினை தோல்வியுறச் செய்வதற்கே நான் முயற்சித்து வந்தேன்.
யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை கையாள்வதென்பது மிகுந்த சவாலாகும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்ற சமயம் அச்சவாலுக்கான விடைதேடும் காரியம் ஏழு வருடங்களால் தாமதமாகி இருந்ததனால் அச்சவால் மேலும் இக்கட்டான சூழ்நிலைக்கு உள்ளாகியிருந்தது. மூன்று தசாப்தங்களாக சமூகத்தில் வேரூன்றியிருந்த போர் மனநிலையினை அகற்றி சகவாழ்வினை ஏற்படுத்துவதற்கு இன்னும் எம்மால் பாரிய வேலைகளை செய்யவேண்டி இருக்கின்றது என தெரிவித்தார்.
Print Friendly, PDF & Email